சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த இந்திய வீரர்கள் 36 ரன்களில் ஆல் அவுட்

by Nishanth, Dec 19, 2020, 12:33 PM IST

இன்று இந்தியா தன்னுடைய 2வது இன்னிங்சில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வெறும் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. இதனால் 90 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா தங்களுடைய 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா, இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் 191 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட முன்னிலை பெற்ற தெம்பில் நேற்று இந்தியா 2வது இன்னிங்சை விளையாட தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. குறைந்தது 300 ரன்களாவது எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா கடினமான இலக்கை நிர்ணயிக்கும் என்று ரசிகர்கள் கருதினர்.ஆனால் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தனர். இன்று 27 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சாய்ந்தன. கடைசியாக இறங்கிய முகமது ஷமி ஒரு ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இந்திய அணியில் யாருமே இரட்டை இலக்கத்தை எட்டவில்லை என்பது தான் இதில் மிகவும் வேதனையான ஒன்றாகும். 40 பந்தில் ஒரே ஒரு பவுண்டரியின் உதவியுடன் 9 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் தான் இந்தியாவின் டாப் ஸ்கோரர் ஆவார்.

தற்போது இந்திய அணி 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா இன்று உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 75 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும். தற்போது கையில் 10 விக்கெட்டுகளும் இரண்டரை நாட்களும் உள்ளன. எனவே இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. முதல் 2 நாட்கள் இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

5 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜோஸ் ஹெய்சல்வுட் மற்றும் 10.2 ஓவர்களில் 4 மெய்டன் ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய கம்மின்சும் தான் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள். இந்திய டெஸ்ட் வரலாற்றில் இந்த 36 ரன்கள் தான் மிகக் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் இந்தியா 46 ரன்களில் ஆட்டமிழந்தது. இது தான் இதுவரை உள்ள சா(வே)தனையாக இருந்தது. இந்த சாதனை தற்போது 46 வருடங்களுக்கு பின் முறியடிக்கப்பட்டுள்ளது. என்பது வேதனையான ஒன்றாகும்.

You'r reading சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த இந்திய வீரர்கள் 36 ரன்களில் ஆல் அவுட் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை