காயம் ஒரு தொடர்கதை 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவும் விளையாட வாய்ப்பில்லை அதிர்ச்சியில் இந்திய அணி

by Nishanth, Jan 12, 2021, 11:45 AM IST

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காயமடைவது தொடர்கதையாகிறது. ரிஷப் பந்த், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அடுத்தபடியாக பும்ராவும் காயமடைந்து இருப்பதால் அவரும் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமே.இந்திய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம் என்றே கூறவேண்டும். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பாகவே துணை கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் காயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவுடனான போட்டி தொடங்கிய பின்னர் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே காயம் குணமான ரோகித் சர்மா 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதல் இன்னிங்சில் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்தை ரன் அவுட்டும் செய்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்யும் போது கையில் காயம் ஏற்பட்டது.

மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கும் பேட்டிங்கின் இடையே கையில் காயம் ஏற்பட்டது.இதனால் இவர்கள் இருவரும் அணியில் இருந்து உடனடியாக வெளியேறினர். இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பந்துக்குப் பதிலாக விருத்திமான் சாஹா கீப்பிங் செய்தார். ஆனாலும் காயத்தைப் பொருட்படுத்தாமல் ரிஷப் பந்த் 2வது இன்னிங்சில் சிறப்பாக ஆடி 97 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டம் தான் இந்த போட்டி டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக அமைந்தது. ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இன்னிங்சில் விளையாட வரவில்லை. அவருக்குப் பதிலாக அஷ்வின் களமிறங்கிச் சிறப்பாக ஆடினார். ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

இதற்கிடையே சிட்னி போட்டியின் போது ஹனுமா விஹாரியும் காயமடைந்தார். அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரும் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். இதையெல்லாம் விட மேலும் ஒரு அதிர்ச்சி இந்திய அணிக்குக் காத்திருந்தது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வயிற்றில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரும் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். அடுத்தடுத்து இந்திய வீரர்கள் காயம் அடைவது இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading காயம் ஒரு தொடர்கதை 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவும் விளையாட வாய்ப்பில்லை அதிர்ச்சியில் இந்திய அணி Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை