டாஸ் போடுவதை நிறுத்த வேண்டாம்- ஐசிசி முடிவு!

by Rahini A, May 30, 2018, 12:47 PM IST

சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பான ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களை மெருகேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல கட்ட முயற்சிகளுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் காயின் டாஸ் செய்துதான் இனிமேலும் விளையாட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

குறிப்பாக உலகளாவிய கிரிக்கெட் சங்கங்களுடன் இணைந்து காயின் டாஸ் திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐசிசி முடிவு செய்தது. இதையடுத்து கடந்த மே 27 மற்றும் 28-ம் தேதிகளில் மும்பையில் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காசு சுண்டிவிட்டு டாஸ் போட்டுப்பார்க்கும் முறையை இனிமேலும் டெஸ்ட் தொடர்களில் நடைமுறையில் வைத்திருக்கலாமா இல்லையா என்பது குறித்தான முடிவு எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய உறுப்பினரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி கூறுகையில், “ஐந்து நாள் தொடரை மெருகேற்ற 140 ஆண்டு கால வழக்கத்தை மாற்ற நினைப்பது சரியல்ல. என்னைப் பொறுத்தவரையில் டாஸ் போட்டு விளையாடும் முறையை ஒழிக்கக் கூடாது.

போட்டித் தொடரை நடத்தும் நாடு டாஸ் போட்டு வெற்றி பெறவில்லை என்றால் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், ஜெயித்தால் பிரச்னை எனக் கூறுவது எந்த வகையில் சரி” என ஐசிசி-யிடம் கேள்வி எழுப்பினார்.

கங்குலி மட்டுமல்லாது சர்வதேச அளவில் முன்னணி வீரர்கள் பலரும் டாஸ் முறையை ஒழிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஐசிசி சார்பில் இனி டெஸ்ட் போட்டிகளில் வழக்கம்போல் காசு சுண்டிவிடும் முறை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இனி வரும் காலங்களில் மைதானத்தில் தகாத நடவடிக்கை, முறையற்ற செய்கை கொண்ட வீரர்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading டாஸ் போடுவதை நிறுத்த வேண்டாம்- ஐசிசி முடிவு! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை