விஸ்வரூபம் எடுக்கும் பாரத்நெட் டெண்டர் ஊழல்..

by எஸ். எம். கணபதி, Jan 29, 2020, 15:26 PM IST

பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் துறை செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? என்று அமைச்சர் உதயகுமாருக்கு திமுக சவால் விடுத்துள்ளது.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாரத்நெட் திட்ட டெண்டரில் முறைகேடு என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத கற்பனையான ஒரு பொய்க் குற்றச்சாட்டு என்று முழு பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்திருக்கிறார் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர்ஆர்.பி. உதயகுமார். அவர், தன் அறிக்கையின் வாயிலாகவே உண்மைகளை மறைக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். அவருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பாரத் நெட் திட்டத்திற்கு இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்று ஒரு பச்சைப் பொய்யை அமைச்சர் கூறியிருப்பதன் மூலம், அவரும் இந்த ஒட்டுமொத்த டெண்டர் திருவிளையாடல்களில் ஆக்கப்பூர்வமான பங்குதாரராக இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.

இத்திட்டத்திற்கு 4 க்கேஜ்களாக ஆன்லைன் டெண்டர் 5.12.2019 அன்றே கோரப்பட்டு, சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 20 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. 22.1.2020 அன்று அந்த டெண்டர் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு, அந்த தேதியும் முடிந்து விட்டது. பிறகு எப்படி அமைச்சர் இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று புதிய கப்சாவை கூச்சம் இல்லாமல் எப்படிச் சொல்கிறார்?

20.1.2020ம் தேதி டெண்டருக்கு இறுதி தேதி என்பதால், அது தொடர்பான Pre-Bid Meeting நடைபெற்றதா அல்லது ரத்து செய்யப்பட்டதா? அதை விளக்கும் துணிச்சல் அமைச்சருக்கு உண்டா? இந்த இறுதி தேதிக்குப் பிறகு தகவல் தொழில் நுட்பச் செயலாளர் சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் சென்றதாகச் செய்திகள் வெளிவந்தது ஏன்?
27.1.2020 அன்று அவரும், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷனுக்கு நிர்வாக இயக்குநராக இருந்த எம்.எஸ். சண்முகமும் திடீரென்று டம்மி பதவிகளுக்கு பழிவாங்கும் நோக்கில் தூக்கியடிக்கப்பட்டது ஏன்? டெண்டர் இப்போதுதான் கோரப்பட்டுள்ளது என்றால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் (DIPR/4685/Tender/2019) என்ன ஆயிற்று? அறிவிக்கப்பட்டபடி 22.1.2020 அன்று மேற்கண்ட அந்த 4 பேக்கேஜ்கள் அடங்கிய டெண்டர் திறக்கப்பட்டதா இல்லையா? என அடுக்கடுக்கான கேள்விகள் பாரத்நெட் உள்கட்டமைப்புப் பணிகளின் டெண்டரில் அணிவகுத்து நிற்கின்றன.
அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லாத உதயகுமார், எங்கள் தலைவரைப் பார்த்து “பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்” என்று வசைபாடுவது அரைவேக்காட்டுத் தனமானது. துறை அமைச்சர் என்ற தகுதியைக் கூட துறந்து விட்டு அவர் தவிப்பதைக் காட்டுகிறது.

பாரத் நெட் திட்ட டெண்டரில் இவ்வளவு அசிங்கமான கூத்துகளையும் அடித்து விட்டு- தனது துறைச் செயலாளர், நிர்வாக இயக்குநர் எல்லோரையும் சதித்திட்டமிட்டு மாற்றி விட்டு, ஒன்றுமே நடக்காதது போல் அமைச்சர் கூறலாம். ஆனால், கோப்புகள் உண்மையை இப்போது மட்டுமல்ல, எப்போதும் பேசும் என்பதை உதயகுமார் மனதில் நிலை நிறுத்திக் கொள்வது நல்லது.

தன் கட்சியின் தலைவர்களான மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, எடப்பாடி எட்டாவது அதிசயம் என்று புகழ்ந்த உதயகுமாரிடமிருந்து இது போன்ற பொய் அறிக்கையை எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், எங்கள் கழகத் தலைவரை விமர்சிப்பதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பாரத்நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால், இந்த டெண்டர் தகவல் தொழில் நுட்பத் துறையின் 9 ஆவது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, உதயகுமாருக்கு நான் சவால் விடுகிறேன். பாரத் நெட் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை என்றால், 22.1.2020 அன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பாரத் நெட் டெண்டர் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? தகவல் தொழில் நுட்பச் செயலாளர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் மட்டத்திலும் இந்த டெண்டர் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? பாரத்நெட் டெண்டர் குறித்த கோப்புகளில் உள்ள குறிப்புகளை அமைச்சரே வெளியிடத் தயாரா?

அதற்கெல்லாம் உங்களுக்குத் தைரியம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், 2000 கோடி ரூபாய்க்கு மேலான பாரத் நெட் டெண்டர் முறைகேடுகளை விசாரித்தால், அதிமுக ஆட்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் போல் இதிலும் வெளிவரும். இன்று அதிகார போதையில் இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால் எங்கள் கழகத் தலைவர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக அரசின் ஊழல்கள் நிச்சயம் வீதிக்கு வரும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

You'r reading விஸ்வரூபம் எடுக்கும் பாரத்நெட் டெண்டர் ஊழல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை