சென்னை, திருவள்ளூரில் மீண்டும் கொரோனா பரவல்..

corona cases rises in chennai and tiruvallur districts.

by எஸ். எம். கணபதி, Sep 26, 2020, 09:47 AM IST

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.சென்னையில் கடந்த 20 நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று முன் தினத்திலிருந்து மீண்டும் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து 200 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.தமிழக அரசு நேற்று (செப்.25) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5679 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 6 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 69,370 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5626 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 13,836 பேர் குணம் அடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது 60, 70 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

நோய்ப் பாதிப்பால் நேற்று 72 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 9148 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 1193 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 165 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 60,926 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 277 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 229 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 33,908 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 31,770 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 661 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், திருப்பூரில் 158 பேருக்கும், கடலூரில் 235 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் 93,002 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 67 லட்சத்து 1677 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

You'r reading சென்னை, திருவள்ளூரில் மீண்டும் கொரோனா பரவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை