ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உடல் அழுகிய நிலையில் மீட்பு..

Tiruchi child sujith body Rescued after 4 days rescue operations

by எஸ். எம். கணபதி, Oct 29, 2019, 07:56 AM IST

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடனடியாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தை சுஜித்வில்சன் கடந்த 25ம் தேதி மாலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். அந்த ஆழ்துளை கிணறு தோண்டிய போது தண்ணீர் வராததால், அதை மேல்மட்டத்தில் மட்டும் மண்ணை கொட்டி மூடியிருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால், ஆழ்துளை கிணறு மேல் கொட்டியிருந்த மண்சரிந்து உள்ளே விழுந்திருக்கிறது. அதனால், ஆழ்துளை கிணறு மீண்டும் திறந்து விட்டது. இதனால்தான், அந்த குழந்தை அதன் மீது ஓடும் போது உள்ளே விழுந்து விட்டான்.

குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என்று வரிசையாக வந்து 25ம் தேதி மாலை முதல் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர். குழந்தை சுவாசிப்பது அவ்வப்போது உறுதி செய்யப்பட்டது. மறு நாள் காலை வரை குழந்தையின் சுவாசம் தெரிந்தது. அதன்பிறகு, ஆழ்துளை கிணற்றுக்குள் மண் சரிந்ததால், குழந்தை கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கி 88 அடி ஆழத்தில் நின்றது. இதன்பிறகு, ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அது பழுது ஏற்படவே 2வது ரிக் இயந்திரம் மூலம் அடுத்த குழி தோண்டப்பட்டது. கனமான பாறைகளையும் துளைத்து போராட வேண்டியிருந்தது. இப்படியாக நான்கு நாட்களுக்கும் மேலாக போராடினர். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், கரூர் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் அங்கேயே இருந்தனர். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் வந்து மீட்புபணியை பார்வையிட்டனர்.

இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்து விட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று(அக்.29) அதிகாலை 3 மணிக்கு அறிவித்தார். நேற்று இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கை சிதைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்பின், அதிகாலை 4.30 மணியளவில் குழந்தை சுஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து குழந்தை உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், காலை 7 மணியளவில் பாதிரியார்கள் வந்து கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்னைகளுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி மற்றும் கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், பாத்திமா கல்லறைத் தோட்டத்தில் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

You'r reading ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உடல் அழுகிய நிலையில் மீட்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tiruchirappalli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை