ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

supreme court extended stay to declare Radhapuram election recounted votes

by எஸ். எம். கணபதி, Oct 25, 2019, 12:23 PM IST

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நான் 69,541 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, அவர் 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு விதிமீறல் நடந்தன. தபால் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை. ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்பட்டனர். தபால் வாக்குகளை எண்ணும்போது போலீசாரைக் கொண்டு, எங்களை பலவந்தமாக வெளியேற்றினர். அதே போல், வாக்கு எண்ணிக்கையில் கடைசி மூன்று சுற்றுகளான 19, 20 மற்றும் 21வது சுற்றுகளில் வாக்கு எண்ணும்போது எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டதாவது:

ராதாபுரம் தொகுதியில் நடந்த தேர்தலின் போது 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளில் பதிவான வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டு்ம். இதற்கு வசதியாக அந்த 3 சுற்றுக்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் தேர்தல் ஆணையம், அக்.4ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஒருவர் தலைமையில் இந்த வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். இதற்காக தேர்தல் பணியில் முன் அனுபவம் உள்ள 4 அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் கடைசி 3 சுற்றுகள் வாக்குகளை எண்ணும் பணி சென்னை ஐகோர்ட்டில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவு மற்றும் வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 24 அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இன்பதுரை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ம் தேதி வரை வெளியிடத் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிவதற்கான தடையை நவம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You'r reading ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவ.13வரை தடை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை