தரக்குறைவாக பேசிய டிராபிக் போலீசுக்கு தக்க பாடம் புகட்டிய விஜய் பட இயக்குநர்!

Traffic Police misbehave with Director Ramana

by Mari S, Aug 27, 2019, 16:29 PM IST

இயக்குநர் ரமணாவிடம் டிராபிக் போலீஸார் இருவர் தரக்குறைவாக நடந்துள்ளனர். அவர்கள் குறித்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ள ரமணாவிடம், போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருமலை, ஆதி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ரமணா. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரை டிராபிக் போலீசார் வழியில் மறித்து தரக்குறைவாக பேசியுள்ளனர்.

அதுகுறித்து, ரமணா வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.

”கண்ணியம் மிக்க காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. பல நேர்மையான மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருங்கிய நட்பும் உண்டு.

ஆனால் இன்று நான் சந்தித்த உதவி ஆய்வாளர்கள் இருவர் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருத தகுதியற்றவர்கள்.

நான், என் மனைவி, மகளுடன் காரில் சென்ற போது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை அபராதம் விதித்துக் கொண்டிருந்தது. சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை அங்கிருந்த காவலர் வழிமறித்து நிறுத்தச்சொல்லி விதியை மீறி திரும்பியதாக அபராதம் கட்ட சொன்னார்.

விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசென்சை காண்பிக்கச்சொல்லி அபராதம் விதித்துக் கொண்டிருந்த உதவி ஆய்வாளரிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.

அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.

அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

கேன்சரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல் துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதாபிமானமற்ற முறையில் பேசியது வேதனைக் குரியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட...

அதைவிட கொடுமை. அழைத்துவந்த காவலர் ராமரிடம், பாதியிலேயே சாவப் போறவனயெல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன் என்றார். இன்னொரு உதவி ஆய்வாளர் உண்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.

அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக் கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசன்ஸ் அந்த கண்ணிய மற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயன்றேன். என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போக வேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூறினாள். மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்.

ஆனால் அந்த குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன் படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன் என்று நிர்பந்தித்தார். என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராதத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டுவந்து தந்தாள்.

அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தால் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.

அரசாங்கத்தின் விதி முறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதாபி மானமற்ற மோசமான செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை.

குறிப்பாக கேன்சர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவார் என்றால் சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது. உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொண்டிருக்கும் எங்களைப்போன்ற கேன்சர் போராளிகளிள் யாரிடமும் அனுதாபத்தை எதிபார்ப்பதில்லை.

ஆனால், இவர்களை போன்றவர்கள் கருணையுடன் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. பாதியில் சாகப்போகிறவன் என்று கண்ணியமில்லாத வார்தைகளில் சராசரி மனிதர்களிடம் அதிகாரத்திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதை தவிர்க்கலாம். செய்வார்களா...?”

இவ்வாறு ரமணா பதிவிட்டிருப்பதை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள், இதுகுறித்து ரமணாவிடம் நேரில் விசாரித்து, அவரிடம் அந்த டிராபிக் போலீசார் சார்பாக மன்னிப்பும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யுடன் மோதும் விஜய்சேதுபதி

You'r reading தரக்குறைவாக பேசிய டிராபிக் போலீசுக்கு தக்க பாடம் புகட்டிய விஜய் பட இயக்குநர்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை