பிரபல பாலிவுட் நடிகர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட்டை மட்டுமல்ல இந்தியத் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்த சுஷாந்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகினர். சுஷாந்த் தற்கொலையில் ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
சுஷாந்த் தற்கொலைக்கு அவரது மன அழுத்தம் காரணம், காதல் தோல்வி, வாரிசு நடிகர், நடிகைகள் அவரை புறக்கணித்தது, பெரிய பட நிறுவனம் ஒன்று அவரிடம் ஒப்பந்தம் வாங்கிக் கொண்டு அவரை மற்ற படங்களில் நடிக்க விடாமல் செய்தது எனப் பல காரணங்கள் கூறப்பட்டது. இது குறித்து மும்பை பாந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி, பட அதிபர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், மேலாளர் உள்ளிட்ட சுமார் 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சுஷாந்த்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங், நடிகையும் காதலியுமான ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாக பாட்னா போலீஸில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ரியா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மறைந்த நடிகர் சுஷாந்த் தந்தை கே.கே. சிங், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது கடுமையான குற்றச் சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். பாட்னா போலீசாருக்கு அளித்த புகாரில், நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ரியா மற்றும் அவரது கூட்டாளிகள் சுஷாந்தை இந்த சூழலுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். சுஷாந்தை அறையில் அடைத்து வைத்து, அவரை போதைப் பொருள் எடுக்க வைத்திருக்கின்றனர். அவரது பணத்தையும் அபகரித்திருக்கின்றனர். இந்த குற்றச் சாட்டுகள் புகார் கடிதத்தில் முக்கிய அம்சமாக உள்ளன.
இதன் அடிப்படையில் பாட்னா போலீசார் ரியாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை நடத்த ஒரு விசாரணைக் குழுவும் மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரியா உட்பட சுமார் 40 பேரின் அறிக்கைகளையும், திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட மற்றும் தர்ம புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா மேத்தா போன்ற பாலிவுட் பிரபலங்களிடம் மும்பை போலீசார் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் விரைவில் தனது வாக்கு மூலம் அளிப்பார் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் நடிகர் கங்கனா ரனாவத் காவல்துறை முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். முன்னதாக, சுஷாந்த் தற்கொலை பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ரியா முறையிட்டிருந்தார்.ஆனாலும் இந்த வழக்கை காவல் துறையினர் விசாரிப்பதில் சுஷாந்தின் குடும்பத்தினர் திருப்தியடைந்துள்ளனர்.