என் ரசிகர்கள் விஜய் படம் பாருங்கள், விஜய் ரசிகர்கள் என் படம் பாருங்கள்.. நடிகர் சிம்பு பரபரப்பு அறிக்கை..

by Chandru, Jan 4, 2021, 12:31 PM IST

கொரோனா ஊரடங்கால் திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. இதனால் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின. கடந்த நவம்பர் மாதம் தீபாவளியையொட்டி தியேட்டர்கள் திறப்புக்கு அரசு அனுமதி வழங்கியது. 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் விஜய் நடித்த மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு தியேட்டர் அதிபர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். நடிகர் விஜய்யும் நேரில் சந்தித்து அதற்காக அனுமதி கேட்டார். நடிகை குஷ்பு, நடிகர் சிம்புவும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 100 சதவீத டிக்கெட் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் 13ம் தேதியும் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் 14ம் தேதியும் திரைக்கு வருகிறது. இந்நிலையில் சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப்படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கி விட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் நடித்துள்ள படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார்.

அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார். திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும் போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். அரசாங்கம் கடைகள், மால்கள் , கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டு விட்டாலொழிய அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதல்வர் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம். நன்றி. அன்புசெய்வோம். இவ்வாறு சிம்பு அறிக்கையில் கூறி உள்ளார்.

You'r reading என் ரசிகர்கள் விஜய் படம் பாருங்கள், விஜய் ரசிகர்கள் என் படம் பாருங்கள்.. நடிகர் சிம்பு பரபரப்பு அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை