எங்கே போனது கறுப்பு பணம்? - மம்தா பானர்ஜி கேள்வி

மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் பெரும் முதலைகள் கறுப்பு பணத்தை மாற்றுவதற்காக இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததா? என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Mamata Banerjee

இது குறித்து மம்தா பானர்ஜி ‘மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 99.3 சதவீதம் அளவிலான பணம் வங்கிகள் மூலம் மீண்டும் நடமாட்டத்தில் விடப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. என்னுடைய முதல் கேள்வி, கறுப்பு பணம் எங்கே போனது?

பெரும் பண முதலைகள் தங்களிடம் இருந்த கறுப்பு பணத்தை எல்லாம் சப்தமில்லாமல் வெள்ளையாக மாற்றிகொள்வதற்குதான் மத்திய அரசு இந்த பண மதிப்பிழப்பு திட்டத்தை கொண்டு வந்ததா? என்பது எனது இரண்டாவது கேள்வி’ என குறிப்பிட்டுள்ளார்.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், ரூ.15, 310,73 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் 10,720 கோடி ரூபாய் பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.