கடும் எதிர்ப்புகளை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திராவை சேர்ந்த பெண் செய்தியாளர் கவிதா உள்பட இரண்டு பெண்கள் சபரிமலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து பல மாநிலங்களில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வரும் சம்ப்ரதாயத்தை எவ்வாறு மாற்றலாம் என்று பக்தர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, நேற்று ஐப்பசி மாதம் முதல் நாளை முன்னிட்டு சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. இதனால், ஏராளமான பெண்கள் கருப்பு உடை அணிந்துக் கொண்டு சபரிமலையை ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கல்வீசி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதன்எதிரொலியால், சபரிமலை ஏற வந்த பெண்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கவிதா என்பவர் போராட்டக்காரர்களையும் மீறி, துணிந்து சபரிமலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவருடன், கருப்பு ஆடை அணிந்து இருமுடி சுமந்து மற்றொரு பெண்ணும் சபரிமலை ஏறிச் சென்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.