என்னா த்ரில்... முதல்ல டை... சூப்பர் ஓவரும் டை...! இங்கிலாந்து

CWC England won the world cup in thrilling match against New Zealand

by Nagaraj, Jul 15, 2019, 09:45 AM IST

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக அமைந்து விட்டது. நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதிய இந்தப் போட்டி கடைசி வரை நீயா? நானா? என மல்லுக்கட்டு நடந்து கிரிக்கெட் ரசிகர்களை ஏக டென்ஷன் ஆக்கி விட்டது என்றே கூறலாம். 50 ஓவர் முடிவில் போட்டி சமனில் (டை) முடிந்தது.

இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுக்க, கடைசியில் போட்டியில் கூடுதல் பவுண்டரி அடித்ததை கணக்கில் கொண்டு, இங்கிலாந்தின் கோப்பை கனவு நனவானது. துரதிர்ஷ்டவசமாக நியூசிலாந்தின் கோப்பைக் கனவு தகர்ந்தது.

இங்கிலாந்தில் 45 நாட்களாக நடைபெற்று வந்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. நியூ சிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதுவரை உலக கோப்பையை ருசிக்காத இவ்விரு அணிகளும், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் களமிறங்கினர். மார்ட்டின் குப்டில் 19 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நியூசி.

கேப்டன் கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோலஸ் உடன் இணைந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஓரளவுக்கு அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில் கேன் வில்லியம்சன் 30 ரன்களில் அவுட்ஆனார். அரைசதம் அடித்த ஹென்றி நிகோலஸ் 55 ரன்களில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதன் பின்னர், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க, அடுத்து களமிறங்கிய ராஸ் டெய்லர் (15), ஜேம்ஸ் நீ‌ஷம் (19), கிரான்ட்ஹோம் (16), டாம் லாதம் (47) மேட் ஹென்றி(4 ) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை மட்டுமே எடுத்தது. மிட்செல் சான்ட்னர் 5 ரன்னுடனும், டிரென்ட் போல்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து அணியில் பிளங்கெட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் 242 ரன்கள் எடுத்தால் உலக கோப்பைபையை முதன் முதலில் ருசிக்கலாம் என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷ வேகத்தில் ரன் எடுக்க இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதனால் இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜோசன் ராய் (17), ஹென்றியின் வேகத்தில் முதலில் வீழ்ந்தார். அடுத்து ரூட் (7), பேர் ஸ்டோவ் (36), கேப்டன் மார்கன் (9) ஆகியோர் அடுத்தடுத்து வீழ,86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இங்கிலாந்து .

முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்த நிலையில், ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்சும், பட்லரும் அதிரடி காட்டி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில் 60 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த பட்லர் அவுட்டாக மீண்டும் நெருக்கடிக்கு ஆளானது இங்கிலாந்து .பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து விளையாட,அடுத்து வந்த வீரர்கள் பிளங் கட்(10), ஆர்ச்சர் (0) அவுட்டாக கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது.

கடைசி ஓவரை போல்ட் வீசினார். முதல் 3 பந்துகளில் 6 ரன்கள் எடுக்கப்பட, 4-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஸ்டோக்ஸ் ஓடிய போது, கப்டில் த்ரோ செய்த பந்து நியூசிலாந்து அணிக்கு எமனாகி விட்டது. ஸ்டோக்சின் பேடில் பந்துபட்டு நேராக பவுண்டரிக்கு செல்ல மொத்தமாக 6 ரன் கிடைத்தது. இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்ட நிலையில் 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய ரஷீத் ரன் அவுட் ஆக, ஒரு ரன் கிடைத்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்ட நிலையில், இந்த முறையும் 2-வது ரன்னுக்கு ஓடிய மார்க் உட் ரன் அவுட் ஆக 241 ரன் மட்டுமே இங்கிலாந்து சேர்த்தது.

இதனால் போட்டி டை ஆனது. சூப்பர் ஓவரில் வெற்றி தோல்வி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. நியூசிலாந்தின் போல்ட் சூப்பர் ஓவரை வீச, இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் எதிர்கொள்ள சூப்பர் ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. 16 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நியூசிலாந்தின் கப்டில், நீஷம் ஆகியோர் களமிறங்கினர். இங்கிலாந்தின் ஆர்ச்சர் சூப்பர் ஓவரின் முதல் பந்தை வைடாக வீச டென்ஷன் எகிறியது. அடுத்த 2 ரன், அதற்கடுத்து சிக்சர் என நீஷம் விளாச, இந்த ஓவரிலும் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. பந்தை தட்டிவிட்டு 2-வது ரன்னுக்கு ஓடிய கப்டிலை அருமையாக ரன் அவுட் செய்தார் பட்லர். இதனால் சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனது.

பின்னர் கிரிக்கெட் விதிகள் படி, பைனலில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகள் கணக்கில் கொள்ளப்பட்டு 24 பவுண்டரிகள் அடித்திருந்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையை தன்வசப்படுத்தியது. நியூ சிலாந்து 17 பவுண்டரிகள் தான் அடித்திருந்தது.

முதல் முறையாக கோப்பையை வென்றதன் மூலம் 44 ஆண்டுகால உலக கோப்பை தொடர் வரலாற்றில் தனது கனவை நனவாக்கிய உற்சாகத்தில் மிதக்கிறது இங்கிலாந்து என்றே கூறலாம். இந்த வெற்றியும் பெரும் போராட்டத்திற்குப் பின் அதிர்ஷ்டம் கை கொடுத்ததால் மட்டுமே சாத்தியமானது என்பதும் உண்மை.

என்னா 'த்ரில்'... முதல்ல 'டை'... சூப்பர் ஓவரும் 'டை'...! இங்கிலாந்து

You'r reading என்னா த்ரில்... முதல்ல டை... சூப்பர் ஓவரும் டை...! இங்கிலாந்து Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை