4வது டெஸ்டை இந்தியா புறக்கணிக்க போவதாக தகவல் 3வது போட்டியை பாதிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் வேதனை

by Nishanth, Jan 6, 2021, 20:24 PM IST

பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா புறக்கணிக்கும் என்ற தகவல் பரவி வருவது நாளை தொடங்க உள்ள 3வது டெஸ்டை பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15 முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தப் போட்டி குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெறுவதால் அங்கு வரும் அனைவரும் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்று குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கூறினார்.

இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாள் தனிமையில் இருந்த பின்னர் தான் விளையாடத் தொடங்கினர். எனவே மீண்டும் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். குயின்ஸ்லாந்து மாநில நிர்வாகம் இந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தால் 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா புறக்கணிக்கவும் தயங்காது என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாளை 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னோடியாக இரு அணி கேப்டன்களும் இன்று சிட்னியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியது: 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா புறக்கணிக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் ஆஸ்திரேலிய வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பெயர் இல்லாத சில மையங்களில் இருந்து இந்திய அணி தொடர்பாகப் பல முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தால் வருங்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா புறக்கணிக்கப் போவதாகக் கூறப்படுவது நாளை தொடங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியைப் பாதிக்கும். நாங்கள் எந்த இடத்திலும் விளையாடத் தயாராக இருக்கிறோம்.

4வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெறும் என்று கூறினாலும் அடுத்த நாளே விமானம் பிடித்து மும்பை செல்லவும் நாங்கள் ரெடி. இந்தப் பிரச்சினை எப்படி முடியப் போகிறது எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை இந்திய அணி சார்பில் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பிரிஸ்பேனில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக இந்திய அணிக்கு அதிருப்தி இருப்பதாக எந்த விவரமும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்திய கேப்டன் ரகானே கூறுகையில், ஏற்கனவே 14 நாட்கள் தனிமையில் இருந்து விட்டோம். மீண்டும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமென்றால் அது பெரும் சிரமமாக இருக்கும். 4வது டெஸ்ட் போட்டியை புறக்கணிக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தான் தெரிவிக்க வேண்டும். சிட்னியில் தற்போது சாதாரண வாழ்க்கை தான் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் விளையாடுவதற்காகத் தான் இங்கு வந்துள்ளோம். அதைத் திறம்பட செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

You'r reading 4வது டெஸ்டை இந்தியா புறக்கணிக்க போவதாக தகவல் 3வது போட்டியை பாதிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் வேதனை Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை