பாஜ எம்.பி மகன் மீது துப்பாக்கிச் சூடு: லக்னோவில் பயங்கரம்
பாரதிய ஜனதா மக்களவை உறுப்பினரான கௌசால் கிஷோரின் மகனை மோட்டார் சைக்கிளின் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். சுடப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்திலுள்ள மோகன்லால்கஞ்ச் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌசால் கிஷோர். இவரது மனைவி ஜெயா தேவி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டப்பேரவை உறுப்பினதாக இருக்கிறார். இந்த தம்பதியரின் மூத்த மகன் ஆயுஷ் கிஷோர் (வயது 30). இன்று (புதன்கிழமை) அதிகாலை 2:45 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, லக்னோ நகரின் மாண்டியான் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ஆயுஷின் கையிலும் மார்பிலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். ஆயுஷ் கிஷோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயுஷ் கிஷோர் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டுள்ளதால் இது முன்விரோதத்தின் காரணமாக நடந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கண்காணிப்பு காமிரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். கௌசால் கிஷோரின் இளை மகன் ஆகாஷ் கிஷோர், ஏற்கனவே சிறுநீரக செயலிழப்பால் மரணமடைந்துவிட்டார்.