சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், காமெடி நடிகர் சூரி அறிமுகமானார்கள். பிறகு இருவரும் வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்து பெரிய ஹிட் படமாக அமைந்தது. தற்போது பண மோசடி விவகரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் தந்தை முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா. இவர் மீதும், மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீதும் நடிகர் சூரி பண மோசடி வழக்கு தொடர்ந்தார். நிலம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட அறிக்கையில்,
என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும். கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது.
நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.. எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூரி தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறியிருந்தார். தற்போது அவர் தனது உழைப்பெல்லாம் இப்படி வீணாகிவிட்டதே என்று மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மோசடியால் நான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். பணத்தை திருப்பி தருகிறேன் இதுபற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்று என்னிடம் கூறியிருந்தார்கள். 2 வருடம் பொறுமையாக காத்திருந்தேன் . இதனால் அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது. சாலை வசதியே இல்லாத இடத்தை தந்து ஏமாற்றப் பட்டேன். இதனல் மன உளைசலுக்குள்ளாகி இருக்கிறேன். நான் பட்ட கஷ்டம், எனது திறமை எல்லாவற்றையுமே வீணாக தொலைத்துவிட்டேன். இப்போது நீதிமன்றத்தை நம்பி இருக்கிறேன் என்றார்.