விநாயகர் சதுர்த்தியை வித்தியாசமாக கொண்டாடும்படி பூனா நகரில் ஏடிஎம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் பூனாவில் உள்ள சகாகர் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சஞ்சீவ் குல்கர்னி என்பவர் வித்தியாசமான ஏடிஎம் ஒன்றை வடிவமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியின்போது கொழுக்கட்டைதான் பிரதானம். மோதகம் என்னும் இந்தக் கொழுக்கட்டையை இயந்திரம் (ATM- Any Time Modak) மூலம் வழங்குவதற்கு சஞ்சீவ் குல்கர்னி ஏற்பாடு செய்துள்ளார்.
விநாயகரின் வடிவம் இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கென விசேஷித்த அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கீ போர்டில் எண்களுக்குப் பதிலாக மன்னிப்பு, தியானம், நேசம், சமாதானம், புத்தி மற்றும் ஈகை போன்ற வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன. அதற்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள அட்டையை உரிய முறையில் பயன்படுத்தினால் 'பேக்' செய்யப்பட்ட மோதகம் (கொழுக்கட்டை) இயந்திரத்திலிருந்து வருகிறது.
"பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றாக முன்னெடுத்துச் செல்லும் முயற்சி இது," என்று இதை வடிவமைத்த சஞ்சீவ் குல்கர்னி தெரிவித்துள்ளார். இதை பார்க்க மக்கள் கூடி வருகின்றனர்.














