ஐபிஎல் போட்டியில் மேலும் ஒரு அணி புதிய அணியை உருவாக்க பிரபல நடிகர் முயற்சி?

by Nishanth, Nov 12, 2020, 20:48 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சீசனில் மேலும் ஒரு அணியைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அணியைப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பரவலுக்கு இடையேயும் ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு நாடுகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டியில் டெல்லியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை ஐந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. கொரோனா பரவல் காரணமாகப் போட்டிகள் நடந்த மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் டிவி முன் அமர்ந்து தினமும் போட்டிகளைக் கண்டுகளித்து வந்தனர்.

இந்த வருடம் கடந்த சீசனை விடப் பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இந்த சீசன் வரை 8 அணிகள் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்நிலையில் 9வதாக மேலும் ஒரு அணியைச் சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 9வது அணியைப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாய் ஸ்டேடியத்தில் டெல்லி, மும்பை அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு நடிகர் மோகன்லாலும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளுடன் அவர் இது குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்படுகிறது. இதற்கிடையே அடுத்த சீசனில் 10வதாக மேலும் ஒரு அணியைச் சேர்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

You'r reading ஐபிஎல் போட்டியில் மேலும் ஒரு அணி புதிய அணியை உருவாக்க பிரபல நடிகர் முயற்சி? Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை