நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி திரைக்கு வந்தது. 28 நாட்களில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் சுசீந்திரன் நடத்தி முடித்தார். பட ரிலீஸுக்கு முன் இப்படத்தின் ஆடியோ விழா சென்னை ஆல்பட் தியேட்டரில் நடந்தபோது சிம்புவின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அடுத்து அவர்கள் சிம்பு பிறந்த நாளை பிப்ரவரியில் தடபுடலாக கொண்டாட ஏற்பாடு செய்து வந்தனர். தற்போது அதுகுறித்து சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 3ம்தேதி சிம்பு பிறந்த தினம் அன்று அவரது ரசிகர் சிம்புவை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து செல்ல எண்ணியிருந்தனர்.
இந்நிலையில் சிம்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு வணக்கங்கள். எத்தனை தடைகளை நான் கடந்து வந்தாலும் என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு. அதுத்தான் நான் அடுத்தடுத்த படங்கள் தருவதற்கும். உடல் எடையை குறைத்து உத்வேகமானதற்கும் மிகமுக்கிய காரணம். கொரோனா காலகட்டத்திற்காக வெகு விரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்தீர்கள். வெற்றி பெறச் செய்தீர்கள். உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். உங்கள் அன்பிற்கு நிறைய நன்றி கடன்பட்டுள்ளேன். எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும்.
ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன். என் குடும்பத்தினர் வந்து என் வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம். நாம் சந்திபோம். ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்தநாளன்று மாநாடு டீஸர் வெளியாகும் மகிழுங்கள். நிச்சம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். அனைவருக்கும் அன்பும், நன்றியும். அன்பு செய்வோம். இவ்வாறு சிம்பு கூறி உள்ளார். சிம்பு இந்த ஆண்டில் கவுதம் மேனன் படம் நடிக்கிறார். இது தவிர பத்து தல படத்தில் நடிக்கிறார். மேலும் ஏ.ஆர். முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் போன்றவர்களின் படங்களில் நடிக்கவும் பேச்சு நடக்கிறது.