முதல்வர் பதவி கிடையாது.. சிவசேனாவுக்கு பாஜக மறுப்பு.. மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு

Fadnavis trashes ShivaSena demand on CM post

by எஸ். எம். கணபதி, Oct 29, 2019, 15:00 PM IST

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர முடியாது என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். இதனால், பாஜக-சிவசேனா ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் ெகாள்ளவில்லை.

அதற்கு பின், பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேரடியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பேசினார். அப்போது, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக சிவசேனா ஒப்புக் கொண்டது. அதனால், பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 14 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகளின்படி, பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனால், சிவசேனா தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தனது கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பிடிவாதமாக கேட்டு வருகிறது.

நாளை(அக்.30) மும்பையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மேலிடப் பார்வையாளர் சரோஜ் பாண்டே ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தின் முடிவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அமித்ஷா சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பாக முதலமைச்சர் பட்நாவிஸ், சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தருவதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று எங்கள் கட்சித் தலைவர் உறுதி செய்துள்ளார். இது வரை சிவசேனாவிடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று கூறி விட்டார். இதையடுத்து, பாஜக எங்கள் நிபந்தனையை ஏற்க மறுத்தால், நாங்கள் மாற்று வழிகளை தேடுவோம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

இதனால், பாஜக-சிவசேனா ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நாளை அமித்ஷா வந்த பிறகு சிவசேனாவை எப்படி அவர் வழிக்கு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, பிரசார் ஜனநாய கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், சிவசேனாவின் பலம் 60 ஆகியுள்ளது. அதே போல், சுயேச்சைகளில் 10 பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அதன் பலம் 115 ஆக உள்ளது. ஆனாலும் சிவசேனா ஆதரவு இல்லாமல் பாஜக ஆட்சியமைக்க முடியாது.

You'r reading முதல்வர் பதவி கிடையாது.. சிவசேனாவுக்கு பாஜக மறுப்பு.. மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை