ஓபிஎஸ் -ஈபிஎஸ் மல்லுக்கட்டு–தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் நிலை அம்போ

ops and eps clash will reflected in admk election

by Suganya P, Mar 26, 2019, 11:00 AM IST

அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை மாவட்டம், வட்டம் என அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து தேர்தல் வேலைளைக் கவனித்தனர். உட்கட்சி பூசல்கள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தனர்.

 

ஆனால், நிலைமை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. ஜெ.,வின் மறைவை அடுத்து  ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியாக உடைந்தது அதிமுக. அதன் பின்னர், நடந்த களேபரங்கள், சமரசப் பேச்சு, முக்கிய பதவி வழங்கள் என மீண்டும் இரு அணி ஓர் அணியாக இணைந்த கதை அறிந்த ஒன்றுதான். என்னதான், இணைந்தாலும் தாமரை இலையில் ஒட்டாத நீரைப் போலவே கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளைச் செய்கின்றனர் என அதிமுக வேட்பாளர்கள் புலம்புகின்றனர்.

கடுகடுப்பில் ஆதரவாளர்கள்..,

ஓபிஎஸ் தனி அணியாகப் பிரிந்தபோது அவருடன் பக்கபலமாக மைத்ரேயன் இருந்தார். பிரதமர் மோடிக்கும் ஓபிஎஸ்-க்கும் பாலமாக மைத்ரேயன் செயல்பட்டார். ஆகையால், தேர்தலில் முக்கிய இடம் ஒதுக்குவார்கள் என பெரிதும் எதிர்பார்த்தார். கிடைத்து ஏமாற்றம். அனைத்து, பொறுப்புகளிலும் இருந்து மௌனமாக ஓரக்கப்பட்டப்பார் மைத்ரேயன். இதனால், அவர் கட்சி பக்கமும், தேர்தல் பணிகளிலும் தலைகாட்டவில்லை என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், இந்த தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் ஓரங்கட்டப்படுகின்றனர் என முணுமுணுக்கின்றன கட்சி வட்டாரங்கள். தேர்தல் பணிகள் தொடர்பான வேண்டுகோள் அறிக்கைகள் ஈபிஎஸ் மட்டுமே தனியாக வெளியிடுகிறார். தேர்தல் பரப்புரையையும் அவர், தன்னிச்சையாகத் தொடங்கியுள்ளதால், ஈபிஎஸ் ஆதரவாளர்களின் கைகள் ஓங்கி வருகிறது. இதனால், நிர்வாகிகளுக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறது.

தேர்தலில் முக்கிய இடங்கள் ஒதுக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டதால்  கடுப்பில்  ஓபிஎஸ்  ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அவரும், தன மகனுக்கு சீட் வழங்கப்பட்டதால் ‘கப் சிப்’ ஆக இருக்கிறார் எனப் புலம்பித் தள்ளுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். அதனால், அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தொய்வாக இருக்கிறது என முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அம்மாவுக்கு பிறகு அதிகாரத்துடன் ‘கல்தா’ கொடுக்க அதிமுகவில் ஆள் இல்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக வாய்ப்பு உள்ளது. அதிமுக வேட்பாளர்களின் நிலையும் ‘அம்போ’ என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

You'r reading ஓபிஎஸ் -ஈபிஎஸ் மல்லுக்கட்டு–தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் நிலை அம்போ Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை