IPL கிரிக்கெட் போட்டி : கடைசி பந்தில் பெங்களூரு அணி வெற்றி

by Sasitharan, Apr 10, 2021, 08:15 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றியை தட்டிச்சென்றது.

14 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை துவங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.

தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி-பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கிறிஸ் லின்னும் களம் இறங்கினர். முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டினர். பின்னர் ரோகித் சர்மா 19 ரன்களிலேயே ரன் அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்தது.

பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து,160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி இறங்கினர். 2 வது பந்தில் கேட்ச் சில் இருந்து தப்பிய வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து இறங்கிய ரஜத் படிதர் 8 ரன்னில் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து விராட் கோலியும், கிளைன் மேக்ஸ்வெல்லும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது விராட் கோலி 33 ரன்களில் எல்.டபிள்யூ. ஆனார். அவரைத் தொடர்ந்து மேஸ்வெல்லும் 39 ரன்களில் அவுட் ஆகினார். இதனால், பெங்களூரு அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அதன்பின் களம் இறங்கிய டிவில்லியர்ஸ் அதிரடி காட்டி அணியை நிமிர வைத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் வீசினார். இதில் முதல் 3 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது. 4-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது டிவில்லியர்ஸ் ரன்-அவுட் ஆனார். இதையடுத்து 2 பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. 5 வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 6 வது பந்தில் ஹர்ஷல் பட்டேல் ஒரு ரன் எடுக்க பெங்களூரு அணி திரில் வெற்றியடைந்தது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்ஷல் பட்டேல் 4 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

You'r reading IPL கிரிக்கெட் போட்டி : கடைசி பந்தில் பெங்களூரு அணி வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை