நிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம்
தனக்குச் சொந்தமான இடத்தை நெல்லை மாநகராட்சி அபகரித்துக் கொண்டதாகத் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வாட்டர் டேங்க் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்
திருநெல்வேலி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (46). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவருக்குச் சொந்தமான இடம் நெல்லை மாநகராட்சியின் 28 ஆவது வார்டு சேவியர்காலனி பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் போலியான ஆவணங்களைத் தயாரித்து மாநகராட்சி சார்பில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் இதே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவரை தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு மீட்டனர்.
இந்நிலையில் கணேசன் தனது மனைவி மேரி, மகள் கவிநயா ஆகியோருடன் 80 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இன்று ஏறி உச்சியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இது குறித்த தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு வந்து கணேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து கணேசன் குடும்பத்தினர் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கீழே இறங்கினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாகக் கூறிச் சென்றனர்.
You'r reading நிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம் Originally posted on The Subeditor Tamil
More Tirunelveli News