திருவாரூரில் போட்டியா? தொண்டர்கள் கேள்வியால் திருதிருவென விழிக்கும் ஜி.கே.வாசன்

G.K.Vasan contest in Thiruvarur byelection ?

by Mathivanan, Jan 5, 2019, 14:32 PM IST

திருவாரூரில் போட்டி இடலாமா என தொண்டர்களின் மனநிலையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்!' என ஜி.கே.வாசனுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர்.

காவிரி டெல்டா பகுதிகளில் அதிக செல்வாக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஒன்று. விவசாயிகளின் எந்தப் போராட்டமாக இருந்தாலும் பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு ஆதரவு கொடுக்கக் கிளம்பிவிடுவார் வாசன்.

அது அத்திக்கடவு அவினாசி திட்டமாக இருந்தாலும் கெயில் திட்டமாக இருந்தாலும் அந்த இடத்தில் ஜி.கே.வாசனைப் பார்க்கலாம். நேற்றும் கூட விளைநிலங்களில் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காததால் சென்னைக்கு திரண்டு வந்து நேற்று சேப்பாக்கத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தினார்கள்.

இந்தபோராட்டத்துக்கு கொங்கு ராஜாமணி, திருப்பூர் செந்தில், வக்கீல் ஈசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து அனைவரும் சேப்பாக்கத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 460 விவசாயிகளை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள இரண்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு முதல் ஆளாகச் சென்று விவசாயிகள் பக்கம் நின்றார் வாசன்.

அப்படியிருக்கும்போது, டெல்டாவில் உள்ள செல்வாக்கைக் காட்டும் வகையில் இடைத்தேர்தலில் நிற்பது குறித்து ஜி.கே.வாசன் இன்னும் பேசாமல் இருக்கிறார். எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பதைப் பற்றியும் அவர் கருத்து கூறவில்லை.

இதைப் பதிவாக வெளியிட்டுள்ள கட்சி பொறுப்பாளர்கள், ' போட்டியிடுவது தொடர்பாக 3 நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். தலைமை ஏன் மௌனமாக இருக்கிறது?' எனக் கேட்டுள்ளார். வேட்புமனுத் தாக்கல் முடிவதற்குள் ஜி.கே.வாசன் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

You'r reading திருவாரூரில் போட்டியா? தொண்டர்கள் கேள்வியால் திருதிருவென விழிக்கும் ஜி.கே.வாசன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை