மணல் கொள்ளையை தடுக்க சிசிடிவி பொருத்த முடியுமா: சென்னை உயர்நீதிமன்றம்

Aug 7, 2018, 11:01 AM IST
செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரிய சக்தி மூலம் கண்காணிப்பு கேமிரா பொருத்த முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலம், கங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செய்யாறு ஆற்றில் சட்டவிரோதமாக பலர் மணல் அள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார். 
 
"மணல் கொள்ளையை தடுக்க இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அதிகாரிகளை ஈடுபடுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்படும் இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். 

மேற்கண்ட கிராமங்களில் ஜூலை 22 ஆம் தேதி சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டபோது எடுத்த புகைப்படங்களையும் உயர்நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் புகைப்படத்தை எப்போது எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் கூறும் இடங்களில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்." 
 
"2017-18ஆம் ஆண்டுகளில் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 783 லாரிகள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சத்து 44 ஆயிரத்து 405 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

மேலும் அவர், "2016-17-ம் ஆண்டுகளில் 120 லாரிகள், 60 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.56 லட்சத்து 84 ஆயிரத்து 330 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் மீது 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரணி, சேத்துப்பட்டு தாசில்தார்கள் இரவு-பகலாக அங்கு திடீர் சோதனையில் ஈடுபடுகின்றனர்" என்றும் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விளக்கத்தை பார்க்கும்போது, மனுதாரர் கூறும் இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது என்று தெரிகிறது. எனவே, இந்த பகுதியில் சூரியசக்தியை கொண்டு இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்பது குறித்து அக்டோபர் 1ஆம் தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

You'r reading மணல் கொள்ளையை தடுக்க சிசிடிவி பொருத்த முடியுமா: சென்னை உயர்நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை