காவல்துறை விசாகா குழுவின் முதல் கூட்டம்
விசாகா குழுவின் தலைவர் சீமா அகர்வால் தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம்
தமிழக காவல்துறை விசாகா குழுவின் தலைவர் சீமா அகர்வால் தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.
காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகள் குறித்த புகார்களை விசாரிக்க கூடுதல் காவல்துறை இயக்குனர் சீமா அகர்வால் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவின் உறுப்பினர்களாக கூடுதல் காவல் துறை இயக்குனர் அருணாசலம், காவல்துறை துணை தலைவர் தேன்மொழி உட்பட 5 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு அமைக்கப்பட்ட முதல் நாளே லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் பெண் எஸ் பி ஒருவர் அதே துறையில் பணியாற்றும் ஐஜி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
அலுவலக விஷயம் தொடர்பாக ஐஜியின் அறைக்கு சென்றபோது பெண் எஸ் பி யை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாற்று எழுந்தது இது காவல்துறை வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக காவல்துறை விசாகா குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் நடந்தது. உறுப்பினர்கள் அருணாசலம், தேன்மொழி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சரஸ்வதி, நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
முதன்முறையாக கூடிய கூட்டத்தில், குழுவுக்கான விதிமுறைகள், விசாரணை வரம்பு, குழுவின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பெண் எஸ்.பி ஐஜி மீது அளித்த புகார் மனுவை படித்து பார்த்த விசாகா குழு, விசாரணையை எங்கிருந்து தொடங்குவது, யார் யாரையெல்லாம் விசாரணைக்கு அழைப்பது, முதலில் யாருக்கு சம்மன் அனுப்புவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியது.
You'r reading காவல்துறை விசாகா குழுவின் முதல் கூட்டம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News