பேட்டியளிப்பது மட்டுமே நிவர் சாதனையா? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

by எஸ். எம். கணபதி, Nov 27, 2020, 15:13 PM IST

மக்களின் பாதிப்புகளை நிவர்த்தி செய்யாமல் பேட்டி அளிப்பது மட்டுமே “நிவர் சாதனை” என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். மேலும், மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இன்று(நவ.27) அவர் மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகரத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறேன். அ.தி.மு.க. அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைநீர் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காமல், இந்தக் குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல் மக்களைத் தவிக்க விட்டுள்ளதைக் காண முடிந்தது.

பல இடங்களில் தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை.
சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை. கலைஞர் நகர், அசோக் நகர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகள், எனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலேயே பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவும் இல்லை; வெளியேற்றப்படவும் இல்லை. ஆனால், முதலமைச்சரும், அமைச்சர்களும் தேங்கி நிற்கும் தண்ணீர் பற்றிக் கவலைப்படாமல், “முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் பாதிப்புகள் குறைந்து விட்டது” என்று பேட்டியளித்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமே, “நிவர் சாதனை” என்று செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இதுவரை சென்னை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல லட்சக்கணக்கானோர் மழை வெள்ளத்திற்கும் - புயலுக்கும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்தி வருகிறது.

இந்து ஆங்கிலப் பத்திரிகையிலேயே மழை வெள்ளம் எப்படி சென்னை புறநகரவாசிகளின் இரவு தூக்கத்தைக் கெடுத்து, அவர்களை இருட்டிலும் இன்னலிலும் தள்ளியது என்பதை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படியும் கூட, அரசின் சார்பில் “விளம்பரத்திற்காக” பேட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டு- ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. “முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் குறைவுதான்” என்று கூறும் முதலமைச்சரால், அந்த குறைந்த சேதம் என்ன என்பதைக் கூட உடனடியாகத் தெரிவிக்க முடியாமல், “இனிமேல்தான் கணக்கு எடுக்க வேண்டும்” என்கிறார். கஜா புயலில் எப்படி கணக்கு எடுக்கப்பட்டது என்பதை இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் மறந்து விடவில்லை. ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நாசமடைந்து விட்டது என்றாலும் - பயிர்க் காப்பீடு செய்யாதவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்கிறார்.

அதையாவது முழுமையாக - பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் - வாழை விவசாயிகளுக்கும் அ.தி.மு.க அரசு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுமா அல்லது வழக்கம் போல் அதிலும் முறைகேடுகளுக்கு வித்திடுவார்களா என்பதுதான் விவசாயிகளின் மனதில் உள்ள கேள்வி. இந்தக் கேள்வி ஏற்கனவே பட்ட பழைய அனுபவத்தால் எழுந்தது என்பதை மறுக்க முடியாது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து - மின்சாரத் துண்டிப்பால் அவதிக்குள்ளாகி - தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் – குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு முதலில் சென்னை மாநகரில் - புறநகரில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை வெளியேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். “கணக்கு எடுக்கிறோம்” என்று காலம் கடத்தாமல் உடனடியாக இழப்பீட்டுத் தொகையையும் - உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading பேட்டியளிப்பது மட்டுமே நிவர் சாதனையா? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை