இங்கிலாந்தில் கொரோனா நிபந்தனைகளை மீறினால் 9.5 லட்சம் அபராதம்

10,000 pound fine on covid 19 rule breakers in uk

by Nishanth, Sep 20, 2020, 18:04 PM IST

கொரோனா நிபந்தனைகளை மீறினால் 9.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது.
இங்கிலாந்திலும் கொரோனா பரவல் மிக அதிகமாகும். இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு மரணமடைந்துள்ளனர். சிறிது காலம் குறைந்திருந்த நோய் பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை நீடிக்கிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்து இங்கிலாந்தில் கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா உறுதி செய்யப்பட்டாலோ அல்லது கொரோனா பாதித்த ஒருவருடன் தொடர்பில் இருந்தாலோ அந்த நபர் உடனடியாக சுய தனிமைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாவிட்டால் 10 ஆயிரம் பவுண்ட் (9.5 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இதை மீறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியது வரும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.


முதல் முறையாக குற்றம் செய்பவர்களுக்கு ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் குற்றம் செய்தால் அபராதம் 10 ஆயிரம் பவுண்டாக அதிகரிக்கும். தனிமையில் இருக்கும் குறைந்த வருமானம் அவர்களுக்கு 500 பவுண்ட் நிவாரண உதவி வழங்கப்படும். இவர்களுக்கு ஏற்கனவே சிகிச்சை உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து அரசின் இந்த புதிய அதிரடி உத்தரவு செப்டம்பர் 28ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading இங்கிலாந்தில் கொரோனா நிபந்தனைகளை மீறினால் 9.5 லட்சம் அபராதம் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை