மேட்டூர் அணை திறப்பின்போது குண்டு வெடிக்கும்.. முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல்.. திருப்பூர் நபர் கைது

Tiruppur man arrested for bomb threat to CM edappadi Palani Samys function in Mettur dam

by Nagaraj, Aug 13, 2019, 13:00 PM IST

மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க வரும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என போனில் மிரட்டல் விடுத்த திருப்பூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் பெய்த கன மழையால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பின. இதனால் காவிரியில் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீரால் ஐந்தே நாட்களில் மேட்டூர் அணையும் நிரம்பும் நிலைக்கு வந்துள்ளது. இன்று காலை மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை தாண்டிய நிலையில், அணைக்கான நீர் வரத்தும் அதிகமாக உள்ளது.

இதையடுத்து டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று காலை திறக்கப்படும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணையை திறந்து வைப்பார் என்றும் நேற்று அவசரமாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை திறக்க வரும்போது, அப்பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறி மிரட்டல் விடுத்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

இதைத் தொடர்ந்து, மர்ம நபரின் செல்போன் எண்ணைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திருப்பூரை அடுத்த குழியூரைச் சேர்த்த தேவகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. எனவே சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து திருப்பூர் போலீசாருக்கு தகவல் பறந்தது. இதைத் தொடர்ந்து திருப்பூர் போலீசார் தேவகிருஷ்ணனை கைது செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக தேவகிருஷ்ணனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதே போன்றுதான் கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்தது. செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததாக திருச்சியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் போலீசில் சிக்கினார். தன்னை ஓட்டல் முதலாளி வேலையை விட்டு நிறுத்திய மன உளைச்சயில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புரோட்டா மாஸ்டர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பிடிபட்டுள்ள தேவகிருஷ்ணன் எதற்காக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு

You'r reading மேட்டூர் அணை திறப்பின்போது குண்டு வெடிக்கும்.. முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல்.. திருப்பூர் நபர் கைது Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை