ஹாங்காங் அணியை போராடி வீழ்த்திய இந்தியா: பாகிஸ்தானிடம் பாயுமா?

by Mari S, Sep 19, 2018, 08:40 AM IST

ஆசிய கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங் காங் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தையே கடைபிடித்தது. ஷிகர் தவான் மட்டும் அதிரடியாக சதமடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளி பறிகொடுத்து 285 ரன்கள் எடுத்தது.

பின்னர், களமிறங்கிய அறிமுக அணியான ஹாங்காங், பாகிஸ்தான் அணியிடம் அடைந்த படுதோல்வியை சமாளிக்க அபாரமான துவக்கத்தை தந்தது. பின்னர், ஆட்டத்தின் இறுதியில், இந்திய அணியின் சூழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 8 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

துவம்சம் செய்த துவக்க ஆட்டக்காரர்கள்:

ஹாங்காங் அணியை எளிதாக எடைப் போட்ட இந்திய அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்களான நிசாகத் கான் மற்றும் கேப்டன் அன்சுமன் ராத், அனுபவமும் திறமையும் வாய்ந்த இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை எட்டுத்திக்கும் எகிற விட்டு, இருவரும் அரைசதம் கடந்தனர். 174 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் செய்த இந்த ஜோடி, இந்தியாவின் வெற்றியை பெரிதும் அசைத்து பார்த்துவிட்டது. ஹாங்காங் அணியிடமா இந்தியா தோற்க போகிறது என ரசிகர்கள் ஏமாற்றமடைய துவங்கினர்.

ஆனால், குல்தீப் யாதவ் வீசிய 34வது ஓவரில் கேப்டன் அன்சுமன் ராத், ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் வலுவான நிலையில் இருந்த பார்ட்னர்ஷிப் பிரேக் ஆனது. அடுத்து சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிசாகத் கான் 92 ரன்களில் அறிமுக வீரர் கலீல் அகமது பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் பின்னர் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால், அடுத்து களமிறங்கிய கார்டர் 3, பாபர் 18, ஷா 17, ஐஷாஸ் 0, எஸ்சான் 22 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து ஹாங் காங் அணி தடுமாறியது. எனவே 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூறாவளியான இந்திய சுழல்:

தோல்வியின் விழும்பிற்கே சென்ற இந்திய அணியை சுழற்பந்துவீச்சாளர்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். இந்திய அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் சாகல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனால், ஹாங்காங் அணியின் மாபெரும் போரட்டம் வீணானது. சிறப்பாக விளையாடி சதமடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தானிடம் பாயுமா இந்தியா?

ஹாங்காங் அணியை வெறும் 116 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி சுருட்டியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால், இந்திய அணி நேற்றைய போட்டியில் ஹாங்காங் அணியை துவம்சம் செய்யாமல் திணறியதால், இன்றைய பாகிஸ்தான் அணியுடனான போட்டியில், இந்தியா சமாளிக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய தரப்பில், ஷிகர் தவான் மற்றும் அம்பத்தி ராயுடு மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற வீரர்கள் அனைவருமே சொதப்பலாகவே ஆடி விக்கெட்டை பறிகொடுத்தனர். வேகப் பந்து வீச்சாளரான புவனேஷ் குமார் மோசமான ஃபார்மில் உள்ளார். ஹாங்காங் போன்ற சிறிய அணியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்த தவறினார். இதே தகுதியுடன் இன்றைய போட்டியில் இந்தியா களம் கண்டால், அது பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிவிடும்.

இன்றைய போட்டியில், ரோகித் ஷர்மா, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் ஜாதவ் மிகவும் பொறுப்புடன் ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்களும் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும்!

இன்றைய போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

You'r reading ஹாங்காங் அணியை போராடி வீழ்த்திய இந்தியா: பாகிஸ்தானிடம் பாயுமா? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை