இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக கங்குலி விருப்பம்

I want to become cricket team India coach, Sourav Ganguly says

by Nagaraj, Aug 2, 2019, 23:02 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடருடன் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவிக் காலமும் முடிவடைந்தது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் உடனடியாக தொடங்கியதன் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. அதன்படி அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க கடந்த ஜூலை 30-ம் தேதி வரை கால அவகாசமும் கொடுத்திருந்தது. இந்தப் பயிற்சியாளர் பதவிக்கு 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:

தெ.ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டன்; இவர் 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர். இவர் தற்போது மீண்டும் பதவிக்கு வர விண்ணப்பித்துள்ளார்.

மகேளா ஜெயவர்த்தன : இலங்கையைச் சேர்ந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றவுடன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பயிற்சியாளராகவும்​, இங்கிலாந்தின் பேட்டிங் ஆலோசகராவும் பணிபுரிந்துள்ளார்.

மைக் ஹேசன் : நியூசிலாந்தைச் சேர்ந்த இவர், நியூசிலாந்து அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.

டாம் மூடி : ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.

ராபின் சிங் : இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் கோச் ஆன ராபின் சிங், இந்தியாவில் அனுபவம் மிக்க பயிற்சியாளர்களில் ஒருவர். மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் போன்ற அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.

லால் சந்த் ராஜ்புட் : 2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் அணி மேலாளராக லால் சந்த் இருந்துள்ளார். தற்போது ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் இவர் அங்கிருந்து விலகி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்துள்ளார்.

இவர்கள் தவிர, தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருக்கும் ரவிசாஸ்திரி மீண்டும் இப்பதவிக்கு வர விரும்பினால், முதல் இரண்டு சுற்றுகள் இல்லாமல் நேரடியாக இறுதிச்சுற்றில் பங்கேற்கலாம்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு கபில்தேவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விரைவில் கூடி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யவுள்ளது.

இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, இந்திய அணியின் பயிற்சியாளராவதே தமது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது : நான் ஒரு நாள் நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்பேன். மீண்டும் இந்திய அணியின் தொப்பியை அணிந்து மைதானத்தில் வீரர்களுடன் வலம் வருவேன். தற்போது நான் மற்ற கிரிக்கெட் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் என்னுடைய விருப்பம் இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பது தான்.

அவ்வாறு நான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றவுடன், இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கான வாய்ப்பை முறையாக தருவேன். இளம் வீரர்கள் இந்திய அணியை வளம் பெறச் செய்வார்கள் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த கங்குலி பல்வேறு சாதனைகள் படைத்து வெற்றிகரமான கேப்டன் என்று பெயர் பெற்றவர். கடந்த 2008-ம் ஆண்டில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கங்குலி, தற்போது டெல்லி அணியின் ஆலோசகராகவும், ஐசிசியின் வர்ணனையாளர் மற்றும் கிரிக்கெட் தொடர்பான பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

You'r reading இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக கங்குலி விருப்பம் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை