கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு 28 வருடங்களுக்குப் பின் இன்று தீர்ப்பு

by Nishanth, Dec 22, 2020, 09:10 AM IST

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 28 வருடங்களுக்கு முன் கோட்டயத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ 2 பாதிரியார், ஒரு கன்னியாஸ்திரி உட்பட 3 பேரைக் கைது செய்தது. இந்த வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.கோட்டயத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி லீலா. இவர்களது மகள் அபயா. கன்னியாஸ்திரியான இவர், கோட்டயத்தில் உள்ள பயஸ் டென்த் என்ற கன்னியாஸ்திரி ஆசிரமத்தில் தங்கி அங்கு உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 1992 மார்ச் 27ம் தேதி ஆசிரமத்தில் உள்ள கிணற்றில் அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து முதலில் உள்ளூர் போலீசாரும், பின்னர் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அபயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடித்தனர். ஆனால் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரி அபயாவின் பெற்றோர் தாமஸ் மற்றும் லீலா இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து சிபிஐ விசாரிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் தான் அபயா கொலை செய்யப்பட்டார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.சிபிஐயின் தீவிர விசாரணையில் பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கன்னியாஸ்திரி செபி, அபயா தங்கியிருந்த ஆசிரமத்தில் தான் தங்கி இருந்தார். அவருக்கும், பாதிரியார்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. பாதிரியார்கள் தாமஸ், ஜோஸ் இருவரும் அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து சென்றனர். சம்பவத்தன்று இவர்கள் உல்லாசமாக இருந்ததை கன்னியாஸ்திரி அபயா பார்த்து விட்டார். இதனால் தான் 3 பேரும் சேர்ந்து அபயாவை கொலை செய்தனர் என்று சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் சிபிஐ கைது செய்தது. கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும், கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டது கேரளாவில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் பாதிரியார் ஜோசை நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கு திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 28 வருடங்களுக்குப் பின் இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

You'r reading கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு 28 வருடங்களுக்குப் பின் இன்று தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை